பருவத் தொடக்கம் (கவிதை)

பருவத் தொடக்கம் 


சூழ்ந்தவையெல்லாம்
தெளிவின்றி தெரியும்

வேறந்த ஓசையும்
செவியுள் புகாது

காண்பதெல்லாமே
அழகோவியமாய் தோன்றும்

உள்ளும் புறமும்
மென்குளுமை படரும்

வானெங்கும் மின்னொளி
 விட்டுவிட்டுச் சுடரும்

காத்திருப்பு வீணல்லவென்ற
எக்களிப்பு பொங்கும்

வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
வாழவைக்கிறதா அன்றி
அழித்துக் கடக்கிறதா என

காதலுக்கும் மழைக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
பருவம் தொடங்குவதில்

(சொல்வனம் இதழில் நவம்பர் 10, 2019 அன்று வெளியான கவிதை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்