கைமாறு
மூடியிருந்த ஜன்னல்களின் சிறிய இடைவெளிகளில் பனிக்காற்று பீறிட்டு உள்நுழைந்தது. தட் தட் எனக்கேட்கும் ஒலி எத்தனை விரைவாகக் கேட்கிறது என்பதை வைத்து ரயிலின் வேகத்தை உணர முடிந்தது. மெல்லிய பனி பலநூறு நுண்முட்களால் சந்துருவின் மேனியை துளைத்து உள்நுழைந்தன. கடும் வெயிலின் தகிப்பு சந்துருக்கு பொருட்டாகத் தெரிந்ததில்லை. ஆனால் பனியின் மென்தைப்பை அவனால் தாங்க முடியவில்லை. கைகளை கட்டிக்கொண்டு உடலை ஒடுக்கியபடி கழிவறையை ஒட்டிய பாதையில் அமர்ந்திருந்தான். அவனைப் போலவே இன்னும் பலரும் அமர்ந்திருந்தார்கள். ஓரமாக இவர்களின் பைகள் குவியலாக கிடந்தது. சந்துரு மற்றவர்களைப் பார்த்தான். பெரிதாக வருந்தாமல் துண்டையோ லுங்கியையோ போர்த்திக் கொண்டு சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இருவர் கால்களை நீட்டியபடியும் மற்றவர்கள் இவனைப் போல கால்களை கையால் கட்டியபடியும் இருந்தார்கள். சந்துருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையினால் முன்பதிவில்லாத இந்தப் பெட்டியில் இப்படி அமர வேண்டியதாகி விட்டது. இங்கே அமர்ந்து இப்படிக் குறுக வேண்டியதாகி விட்டதே என்ற எண்ணம் எழுந்ததும...