தோற்றங்கள்
சந்திரன் வாசலில் நின்றபடியே தெருவில் வருபவர்களையும் வீட்டினுள் கண்ணாடிப் பெட்டியினுள் கிடத்தப்பட்டிருந்த அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திரனின் மனைவி சுந்தரியும் பத்தாம் வகுப்பு பயிலும் மகள் அகல்யாவும் அம்மாவின் தலைமாட்டில் தரையில் அமர்ந்திருந்தார்கள். கல்லூரியில் பயிலும் மகன் பிரபா கடைகளுக்கு அலைந்து கொண்டிருந்தான். முதலில் கண்ணாடிப் பெட்டியை வரவழைத்தவன் சாமியானாவிற்கும் நாற்காலிகளுக்கும் சொல்லிவிட்டு வந்தான். இப்போது , இறுதிச் சடங்கிற்கான காரியங்களை செய்பவர்களை பார்த்துவிட்டு மயானத்திற்கும் சென்று பேசிவிட்டு வருவதற்காக சென்றுள்ளான். தெருவுக்கு குறுக்கே பந்தல் போடப்பட்டிருந்தது. தெருவின் இரு பக்கமும் நீளவாக்கில் நாற்காலிகளை பிரித்துப் போட்டிருந்தார்கள். தகவல் தெரிந்து வருபவர்கள் சந்திரனைப் பார்த்து , இவனுடனான அணுக்கத்திற்கேற்ப கையை குலுக்கியோ அல்லது தோளை அணைத்துவிட்டோ உள்ளே சென...